தமிழ் நாடகம்,நாடக இலக்கண நூல்கள்,வளர்ச்சி நிலைகள்


தமிழ் நாடகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 2500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகிறது.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்
என்பது தொல்காப்பியம்.
 தமிழ் நாடக இலக்கண நூல்கள்
தமிழ் நாடகக் கட்டமைப்பையும் ஒழுங்கு முறையையும் கூறும் நாடக இலக்கண நூல்கள் நிறைய உண்டு. முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல் ஆகியவை நாடக இலக்கண நூல்கள் ஆகும்.

1897 இல் பரிதிமாற்கலைஞர் ‘என்னும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் நாடகவியல்’ நூலை வெளியிட்டார். அதில் அவர் தமிழ் மரபு, வடமொழி மரபு, மேனாட்டு மரபு ஆகிய நாடகங்களை ஆராய்ந்து நாடக இலக்கணத்தைச் செய்தாகக் குறிப்பிட்டிருக்கிறார். 272 நூற்பாக்களில் நாடக வகைகள், நாடகம் எழுதும் முறை, நடிப்பு விளக்கம், பாத்திர இயல்பு முதலான செய்திகளை அமைத்துள்ளார். மேடையமைப்புப் பற்றியும் நடத்துநர் பற்றியும் கூறியுள்ளார்.  எஸ்.கே.பார்த்தசாரதி அய்யங்கார் ‘தமிழ் நாடக மேடைச் சீர்திருத்தம்’  (1931), ‘நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி’ (1936) ஆகிய இரு நூல்களைப் படைத்துள்ளார்.

 விபுலானந்த அடிகளின் ‘மதங்க சூளாமணி’ என்ற நூல் 1976 இல் வெளிவந்தது. உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் என மூன்று இயல்களாக இவர் நாடக இலக்கணத்தைக் கூறியுள்ளார். தமிழ் நாடகங்களையும் ஆங்கில மொழிபெயர்ப்பு நாடகங்களையும் ஒப்பிட்டு இவர் எழுதியுள்ளார்.விபுலானந்த அடிகள் மதங்க சூளாமணி என்னும் நாடக ஆராய்ச்சி நூலை வெளியிட்டார்.  

பம்மல் சம்மந்தனார் ‘நாடகத் தமிழ்’ (1962) என்ற நூலில் அவர் நூல் எழுதிய காலம் வரையுள்ள நாடக இலக்கணக் கருத்துகளையும் நாடக நூல்களையும் தாம் கண்ட நாடகங்களையும் கொண்டு நாடக இயல்புகள் குறித்துக் கூறியுள்ளார்; நாடகக் குழுக்கள் பற்றியும் கூறியுள்ளார்; தமிழ் நாடகங்கள் வடமொழி நாடகங்களிலிருந்து வேறுபடுதல் பற்றியும் ஆய்ந்துள்ளார். இவருடைய ‘நாடக மேடை நினைவுகள்’, ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்’ ஆகிய நூல்களும் குறிப்பிடத் தக்கன.
 
ஒளவை சண்முகம் ‘நாடகக்கலை’ என்ற நூலில் தமிழ் நாடக வரலாறு குறித்தும் நடிப்புக்கலை குறித்தும் நாடகத்தில் பிரச்சாரம் குறித்தும் கூறியுள்ளார். எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் ‘நாடகக் கலையின் வரலாறு’, நாரண துரைக்கண்ணனின் ‘தமிழில் நாடகம்’, கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழ் நாடக வரலாறு’ ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. மேலகரம் முத்துராமன் என்பவர் நாடக இலக்கணத்தைப் பாட்டில் எழுதியுள்ளார். அங்கவியல், அரங்கவியல், அமைப்பியல், அழகியல், நடிப்பியல், பாட்டியல், இணைப்பியல் என ஏழு இயல்களில் எளிமையாக நாடகம் குறித்து விளக்கியுள்ளார். 

 தமிழ் நாடகம் வளர்ச்சி நிலைகள்
தமிழ் நாடக வளர்ச்சி நிலைகளைச் சிலப்பதிகாரம் தான் முதன் முதலில் சுட்டிக் காட்டுகிறது. வேத்தியல், பொதுவியல் ஆகிய கூத்து வகைகளும் அகக்கூத்து, புறக்கூத்து ஆகியனவும் மாதவி ஆடிய பல்வகைக் கூத்துகளும் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன. தமிழ் நாடக வளர்ச்சியில் இது முதல் நிலை.
பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகிய அடிப்படைகளில் தமிழ் நாடகம் வளர்ச்சி அடைந்தது இன்னொரு நிலை.
குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம், விலாசம் எனக் கதைகளின் அடிப்படையில் நாடகம் வளர்ச்சி அடைந்தது மூன்றாம் நிலை.
இவை அனைத்தும் அடிப்படையாகக் கொண்டும் வட இந்தியாவிலிருந்து புதிதாக வந்த நாடக அமைப்புகளையும் தழுவிப் புதிய நாடக அமைப்பைப் பெற்றது 



Popular posts from this blog

தமிழக நாட்டுப்புற கலைகள்

FORMATS OF RADIO PROGRAMMES

ROLE OF ADVERTISING IN MARKETING MIX